ஆண்டுக்கு ரூ.88 லட்சம் கோடி சம்பளம் மஸ்க்குக்கு 1,008 கண்டிஷன்கள் டெஸ்லா பங்குதாரர்கள் செக்
புதுடில்லி: டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கு 88 லட்சம் கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் வழங்கும் திட்டத்துக்கு, நிறுவனத்தின் 75 சதவீத பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கிஉள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற டெஸ்லாவின் ஆண்டு பொது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க், உலகின் முதல் ட்ரில்லியனர் ஆவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பில், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்பது கிட்டத்தட்ட 88 லட்சம் கோடி ரூபாயாகும். எனினும் இந்த சம்பளம் உடனடியாக வழங்கப்படாது. இதை பெறுவதற்கு, எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட இலக்குகளை எட்டும்பட்சத்தில் அவருக்கு டெஸ்லாவின் 12 சதவீத பங்குகள் வழங்கப்படும். இதன் சந்தை மதிப்பு வாயிலாக கிடைக்கும் வருமானம், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 88 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். டெஸ்லா நிறுவனத்தில் தனக்கு கூடுதல் பங்கு வழங்கவில்லை என்றால் வெளியேறுவேன் என எச்சரித்திருந்த எலான் மஸ்க், பங்குதாரர்களின் முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும், ஆண்டு கூட்ட அரங்கில் ஏறி, டெஸ்லாவின் மனித ரோபோ 'ஆப்டிமஸ்' உடன் இணைந்து எலான் மஸ்க் நடனமாடினார். கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் டெஸ்லாவின் சந்தை மதிப்பை 10 ஆண்டுகளுக்குள் 748 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்; தற்போதைய மதிப்பு 132 லட்சம் கோடி ரூபாய் ஆண்டுக்கு 2 கோடி கார்களை விற்பனை செய்ய வேண்டும்; கடந்த ஆண்டு 17.89 லட்சம் கார்கள் விற்பனை ஆண்டுக்கு 35.20 லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்ட வேண்டும்; கடந்த ஆண்டு லாபம் 63,000 கோடி ரூபாய்