சிங்கப்பூரில் யு.பி.ஐ., வசதி 13 வங்கிகளுக்கு விரிவாக்கம்
புதுடில்லி:என்.பி.சி.ஐ., எனும் தேசிய பண பரிவர்த்தனை கழகம், 'யு.பி.ஐ., - பே நவ்' பணப் பரிமாற்ற சேவையை வழங்க, மேலும் 13 வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து, இந்த சேவையில் இணைக்கப்பட்டுள்ள மொத்த வங்கிகளின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. யு.பி.ஐ., - பே நவ் என்பது, ரிசர்வ் வங்கி மற்றும் எம்.ஏ.எஸ்., எனும் சிங்கப்பூர் பண ஆணையத்தால் இணைந்து உருவாக்கப்பட்ட உடனடி எல்லை தாண்டிய பணப் பரிமாற்ற சேவை.இதன் வாயிலாக இரு நாட்டு மக்களும் எளிதாகவும், விரைவாகவும் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். இந்திய பயனர்கள் தங்களது யு.பி.ஐ., ஐ.டி., மொபைல் எண் அல்லது வி.பி.ஏ., எனும் விர்சுவல் பேமென்ட் அட்ரஸ் வாயிலாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதே போல சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால், பே நவ் அடையாள எண்களைக் கொண்டு அனுப்பலாம். இது, பாரம்பரிய பணப் பரிமாற்ற முறைகளுக்கான தேவையை நீக்குவதோடு, குறைந்த செலவில், விரைவாக பணம் அனுப்ப வழிவகை செய்கிறது.