ஸ்டார்ட் அப்களிடம் பொருள் வாங்க பொதுத்துறை நிறுவனங்கள் தயக்கம்
சென்னை:பொதுத்துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதில் தயக்கம் காட்டுவதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசின் கீழ் மின் வாரியம், உப்பு நிறுவனம், சிமென்ட் நிறுவனம் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. விதிகளில் தளர்வு
அவை இணையதள 'டெண்டர்' கோரி குறைந்த விலைப்புள்ளி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்கு தேவைப்படும் சாதனங்கள், பொருட்களை வாங்குகின்றன. 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் சந்தை வாய்ப்பை அதிகரிப்பதற்காக, 50 லட்ச ரூபாய் வரை, உற்பத்தி துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் வகையில், ஒப்பந்த விதியை அரசு தளர்த்தியுள்ளது. ஆனால், பல பொதுத்துறை நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் பொருட்களை வாங்காமல் அலட்சியம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, தொழில்முனைவோர் தரப்பில் கூறியதாவது:புத்தொழில் நிறுவனங்கள் எல்.இ.டி., பல்பு, டியூப் லைட், எழுது பொருட்கள் என பலவிதமான பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. எங்களின் தயாரிப்புகளை வாங்குமாறு பொதுத்துறை நிறுவனங்களை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. கண்காணிப்பு பிரிவு
எனவே, ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்கப்படுவதை உறுதி செய்வதற்கு, சிறப்பு கண்காணிப்பு பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் ஆண்டு அறிக்கையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் வாங்கிய விபரத்தை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். இவ்வாறு தொழில்முனைவோர் கூறினர்.