94,000 டாலரை தாண்டியது பிட்காயின் மதிப்பு
கடந்த வாரத்தில் 90,000 டாலரை முதல்முறையாக எட்டிய பிட்காயின் மதிப்பு, நேற்று 94,000 டாலரைத் தாண்டி, இதுவரை இல்லாத உச்சம் தொட்டது. இதனால், கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு, 250 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதால், முன்னேற்றம் காணத் துவங்கிய கிரிப்டோகரன்சி சந்தை, அவரது அரசு அமைக்கும் நடவடிக்கைகள் வேகம் பெற்று வரும் நிலையில், தொடர்ந்து உயர்வுப் பாதையிலேயே நீடிக்கிறது. கிரிப்டோகரன்சி வணிகத்துக்கு, அமெரிக்க புதிய அரசு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில், சந்தையில் உற்சாகம் நீடிக்கிறது. 'பக்த்' என்ற கிரிப்டோ நிறுவனத்தை, டிரம்பின் சமூக வலைதள நிறுவனமான 'ட்ரூத் சோஷியல்' வாங்க பேச்சு நடப்பதாக வெளியான தகவலும், கிரிப்டோகரன்சி வணிகத்தில் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.