உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பெட்ரோல், டீசல் ரூ.3 வரை குறைக்கலாம் தர ஆய்வு நிறுவனமான இக்ரா அறிக்கை

பெட்ரோல், டீசல் ரூ.3 வரை குறைக்கலாம் தர ஆய்வு நிறுவனமான இக்ரா அறிக்கை

புதுடில்லி:கச்சா எண்ணெய் விலை சில வாரங்களாக, ஒரு பேரல் கிட்டத்தட்ட 74 டாலராக நீடிப்பதால், பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என தர ஆய்வு நிறுவனமான, 'இக்ரா' தெரிவித்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதத்தில், லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 84 டாலராக இருந்தது. கடந்த 17ம் தேதியில் இருந்து, கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 74 டாலருக்கும் குறைவாக நீடிக்கிறது.கச்சா எண்ணெய் விலை, 75 டாலரில் சில வாரங்கள் நீடித்தால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கக்கூடும் என, பெட்ரோலியத் துறை செயலர் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது.எதிர்வரும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில், ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டும், விலை குறைப்பு அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.கச்சா எண்ணெய் விலை சரிவால் நிறுவனங்களுக்கு, பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய், டீசல் 12 ரூபாய் லாபம். கடந்த கால நஷ்டம் சரிசெய்யப்பட்டதால், விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது: இக்ரா

எண்ணெய் நிறுவனங்கள் மவுனம்?

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, அதிகரிப்புக்கான அதிகாரம், ஓ.எம்.சி., எனப்படும் எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ளது. கடந்த 2021 நவம்பருக்கு முன்பு வரை, தினசரி விலையை மாற்றிய இந்நிறுவனங்கள், பின்னர், 2024 மார்ச் வரை விலை மாற்றத்தை நிறுத்தி வைத்தன. மார்ச் மாதத்தில், லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்ட பின், இதுவரை பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. மின்சார வாகனங்கள் அதிகரிப்பால், கச்சா எண்ணெய் தேவை குறைவதால், தற்போதைக்கு அதன் விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் விலை மாற்றம் குறித்து தொடர் மவுனம் காக்கின்றன இந்நிறுவனங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி