| ADDED : ஜூன் 28, 2024 11:03 PM
பெங்களூரு: பெங்களூரில் 150 கி.மீ.,க்கு மேம்பாலம், சிக்னல் இல்லாத சாலைகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரு இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்துள்ளது. இதற்கு இங்குள்ள ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் காரணம். பெங்களூரில் பல மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். நகரில் வாகனங்களும் அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து சாலைகளிலும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுக்கிறது. ஆனாலும், போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஹெப்பாலில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை 18 கி.மீ.,க்கு சுரங்க பாதை அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகளும் துவங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள், நகருக்குள் வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வெளிவட்ட சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கர்நாடக துணை முதல்வரும், பெங்களூரு நகர வளர்ச்சி அமைச்சருமான சிவகுமார் அளித்த பேட்டி: வெளிவட்ட சாலைகள் அமைக்க ஏழு, எட்டு முறை டெண்டருக்கு அழைப்பு விடுத்தாலும் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் வெளிவட்ட சாலை பணிகளை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. தற்போது, வெளிவட்ட சாலைகளுக்கு பெங்களூரு வளர்ச்சி ஆணையம் புதிய வடிவத்தை கொடுத்துள்ளது. அதாவது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மேம்பாலம், சிக்னல் இல்லாமல் 150 கி.மீ.,க்கு சாலைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.