உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் மக்கள் பாதுகாப்பு: அமித் ஷா உறுதி

மணிப்பூர் மக்கள் பாதுகாப்பு: அமித் ஷா உறுதி

இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், 2023ம் ஆண்டு மே மாதத்தில் கூகி - மெய்டி பழங்குடியின சமூகங்களுக்கு இடையே மோதல் வெடித்தது.ஆயுதமேந்திய போராட்டக்காரர்களால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தெடர்ந்து அரங்கேறி வருகின்றன.இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலகினார். தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட ஆயுதங்களை போராளி குழுக்கள், கலவர கும்பல்கள் அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர்.ஒரே வாரத்தில் 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், அங்குள்ள சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆய்வு செய்தார். இதில், மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ''மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுங்கள்,'' என, பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிலில் துப்பாக்கிச் சூடு

மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள மெய்டி சமூகத்துக்கு சொந்தமான கோவிலில் நேற்று சிலர் பிரார்த்தனையில் ஈடுபட்ட போது, கூகி இனத்தவர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள மலைகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மெய்டி இனத்தவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை