| ADDED : ஆக 23, 2024 06:08 AM
ஷிவமொகா: பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ் மகன் பசவேசை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, சிறையில் இருக்கும் கஞ்சா வியாபாரி மீது வழக்கு பதிவாகி உள்ளது.ஷிவமொகா பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ். இவரது மகன் பசவேஸ். சங்கமேசின் ஆதரவாளர் சுனில். இவர் ஒப்பந்ததாரர். கடந்த 17ம் தேதி சுனிலை, முபாரக் என்பவர் சந்தித்து பேசினார்.'எம்.எல்.ஏ., சங்கமேஸ் மகன் பசவேசை கொலை செய்ய, சிறையில் இருக்கும் கஞ்சா வியாபாரி 'டிச்சி' முபாரக் என்பவர், வெளியில் இருக்கும் தன் கூட்டாளி திப்பு மூலமாக, திட்டம் தீட்டி உள்ளார். இது பற்றி எனக்கு தெரிய வந்தது' என்றார்.அதிர்ச்சி அடைந்த சுனில், கடந்த 19ம் தேதி பத்ராவதி பழைய நகர் போலீஸ் நிலையத்தில், டிச்சி முபாரக் மீது புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டது.திப்புவை பிடித்து பத்ராவதி பழைய நகர் போலீசார் விசாரிக்கின்றனர். பசவேசை கொலை செய்ய திட்டம் தீட்டியதற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.