| ADDED : ஜூலை 20, 2024 11:49 PM
பாலக்காடு: பாலக்காடு கோட்டத்தை இரண்டாக பிரிக்க உள்ளதாக வெளியான செய்திகளை தெற்கு ரயில்வே நிராகரித்துஉள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் பாலக்காடு கோட்டம் இயங்கி வருகிறது. கோவை, போத்தனுார் சந்திப்பு முதல், மங்களூரு சந்திப்பு வரை ஏராளமான ரயில் நிலையங்கள் இந்த கோட்டத்தின் கீழ் வருகின்றன. இந்நிலையில் பாலக்காடு கோட்டத்தில் இருந்து மங்களூரை பிரித்து தனி கோட்டம் உருவாக்க உள்ளதாக செய்தி வெளியானது. இதுகுறித்து பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி கூறியதாவது: பாலக்காடு கோட்டத்தில் இருந்து மங்களூரு பகுதியை பிரித்து, தனி கோட்டம் உருவாக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது. தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தை பிரிப்பது தொடர்பாக எந்த விவாதமோ, முன்மொழிவோ, திட்டங்களோ இல்லை.சமீபத்தில் மங்களூரில் ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா தலைமையில் நடந்த கூட்டத்தில், மங்களூரு பகுதியில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. பாலக்காடு கோட்டத்தை பிரிப்பது குறித்து விவாதிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.