தார்வாட்: கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக, வரும் 7ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் இன்று மாலை 6:00 மணியுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது.கர்நாடகாவில் முதல் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி, 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி;ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, வரும் 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.இந்த தொகுதிகளில் 206 ஆண்கள் உட்பட மொத்தம் 227 பேர் போட்டியிடுகின்றனர்.சுர்பூர் சட்டசபை தொகுதிக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு, ஆறு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகளின் தேசிய, மாநில தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி உட்பட அனைத்து கட்சித் தலைவர்களும் இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். வேட்பாளர்களும் மிகவும் உற்சாகத்துடன் பிரசாரம் செய்து வருகின்றனர்.ஓட்டுப்பதிவுக்கு நிறைவு பெறுவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன், பகிரங்க பிரசாரம் ஓய வேண்டும். இந்த வகையில், இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளிலும் இன்று மாலை 6:00 மணியுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது.