பெங்களூரு, 'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதியளித்த கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, மாநிலம் முழுதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். மங்களூரில் தனியார் பஸ் மீது கற்கள் வீசி சேதப்படுத்தினர். பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால், பொதுமக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. அங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வரின் மனைவிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது. அனுமதி
இதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் விசாரணை நடத்த, கடந்த 17ம் தேதி கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். கவர்னரின் இந்த செயலை கண்டித்து, கர்நாடகா முழுதும் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர். பெங்களூரு சுதந்திர பூங்காவில், மாநில காங்., தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கவர்னருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, அமைச்சர்களே ஒருமையில் பேசினர். சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேசமாக பேசினர். கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற அக்கட்சி தொண்டர்களை, போலீசார் கைது செய்து, சிறிது நேரத்தில் விடுவித்தனர்.முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரில் காலை முதலே போராட்டம் தீவிரமாக இருந்தது. கவர்னருக்கு எதிராக மட்டுமின்றி, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராகவும் காங்கிரசார் கோஷம் எழுப்பினர். நடுரோட்டிலேயே படுத்து உருண்டும், சட்டைகளை கழற்றி விட்டு அரை நிர்வாணமாகவும் போராட்டம் நடத்தி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். படம் எரிப்பு
முதல்வர் படத்துக்கு பால் அபிஷேகம் செய்தும், கவர்னர் படத்தை எரித்தும் கோபத்தை காண்பித்தனர். சாமுண்டி மலையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், கடைகளை அடைத்து விட்டு, கவர்னரை கண்டித்து அங்கேயே போராட்டம் நடத்தினர். இதனால், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்த பக்தர்கள், பூஜை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்திய தொண்டர்கள், நடுரோட்டில் டயர்களுக்கு தீ வைத்து கோஷம் எழுப்பினர். அந்த வழியாக வந்த தனியார் பஸ் மீது கற்கள் வீசினர். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுதும் உடைந்தது. கருகிய தலைமுடி
ஹாசன் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், டயருக்கு தீ வைக்கப்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த சஞ்சு என்ற மகளிர் ஏட்டு தலைமுடி தீயில் கருகியது. மாநிலம் முழுதும் காங்கிரசார் நடத்திய போராட்டத்தால் பொதுமக்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையில், இப்பிரச்னையில் முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் அக்கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கவர்னர் நடவடிக்கையில் உள்நோக்கம்
ஐகோர்ட்டில் சித்தராமையா தரப்பு வாதம்கர்நாடகா கவர்னரின் உத்தரவுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் நேற்று, முதல்வர் தரப்பில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை, நேற்றே அவசர வழக்காக கருதி விசாரிக்கும்படி முதல்வர் தரப்பில் கோரப்பட்டது. இதன்படி, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று மதியம் 2:30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.முதல்வர் தரப்பில் ஆஜரான, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடியதாவது:பல ஆண்டுகளாக, வெவ்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுக்கள், கவர்னரிடம் அப்படியே உள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் மனு மீது மட்டும் அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார். கவர்னர் அனுமதி அளித்ததன் பின்னணியில், சிலரின் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். நல்லாட்சிக்கான நோக்கம் இதில் இல்லை.முதல்வரின் மனைவிக்கு சொந்தமான, 1,48,104 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி கொண்ட மைசூரு மேம்பாட்டு ஆணையம், வெறும் 38,284 சதுர அடி நிலத்தை, 14 மனைகளாக கொடுத்துள்ளது. இதில், முதல்வர் முறைகேடு செய்ததற்கான ஒரு ஆதாரமும் இல்லை.எனவே, முதல்வர் மீது விசாரணை நடத்த அளித்த அனுமதியை திரும்ப பெறும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.கவர்னர் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகி வாதிடுகையில், ''போதிய ஆதாரங்கள் இருப்பதால் தான் முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது. எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது,'' என்றார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''இவ்வழக்கு வரும் 29ம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், உத்தரவை ஒத்திவைக்க வேண்டும். எதிர்மனுதாரர்களுக்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என, உத்தரவு பிறப்பித்தார்.