புதுடில்லி, போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுஉள்ளதாக பதஞ்சலி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பொய்யான தகவல்களுடன் விளம்பரம் செய்ததை எதிர்த்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தின் தலைமையகம் செயல்படும் உத்தரகண்ட் மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு பதில் அளித்த உத்தரகண்ட் அரசு, பதஞ்சலி நிறுவனத்திற்கு, 14 பொருட்களை தயாரிப்பதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ள தாவது:உத்தரகண்ட் அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. நாடு முழுதும் உள்ள, 5,606 விற்பனை நிலையங்களில் இருந்து அந்தப் பொருட்களை விலக்கி கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த, 14 பொருட்கள் தொடர்பான விளம்பரங்களும் நீக்கப்பட்டுள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இருந்து விளம்பரங்கள் நீக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி, அமர்வு உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை, ஜூலை 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.உத்தரகண்ட் அரசு தடை விதித்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களின் விபரம்:ஸ்வசாரி கோல்டு, ஸ்வசாரி வாட்டி, பிரோன்சோம், ஸ்வசாரி பிரவாஹி, ஸ்வசாரி அவாலே, முக்தா வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிபிடாம், பிபிகிரித், மதுகிரித், மதுனாஷினி வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிவாம்ரித் அட்வான்ஸ், லிவோகிரித், ஐகிரித் கோல்டு, பதஞ்சலி திருஷ்டி ஐ டிராப் ஆகியவை.
ஐ.எம்.ஏ., விளக்கம்
பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஐ.எம்.ஏ., தலைவர் அசோகன், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, உச்ச நீதிமன்றம் குறித்து அவர் சில கருத்துகளை தெரிவித்தார்.இதையடுத்து அவர் மீது, பதஞ்சலி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஹீமா கோஹ்லி, சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அசோகன் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:நீதிமன்ற உத்தரவின்படி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் விளம்பரத்தை அசோகன் கொடுத்துள்ளார். சங்கத்தின் மாதாந்திர இதழ், இணையதளத்திலும் இது வெளியிடப்பட்டது. அதுபோல், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. அவர் மன்னிப்பு கேட்ட செய்தியை, அதனடிப்படையில் பல பத்திரிகைகள் வெளியிட்டன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பதஞ்சலியின் வழக்கறிஞர் கருத்தை அமர்வு கேட்டது. அவர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.