| ADDED : ஜூன் 09, 2024 11:39 PM
ஹைதராபாத்: தெலுங்கு பத்திரிகை உலகின் முன்னோடியும், ராமோஜி குழும தலைவருமான ராமோஜி ராவ் காலமானதை தொடர்ந்து, அவரது உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் ஹைதராபாதில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று நடந்தது.ஆந்திராவில் ஈநாடு பத்திரிகையை துவங்கி தெலுங்கு ஊடகத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் ராமோஜி ராவ், 88. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று முன்தினம் ஹைதராபாத் மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஹைதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அவரது இறுதிச்சடங்கு நேற்று முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. தொடர்ந்து ராமோஜியின் சிதைக்கு மகன் கிரண் தீ மூட்டினார். ராமோஜியின் இறுதி சடங்கில் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.ஈடிவி, ராமோஜி குழுமம், ராமோஜி பிலிம் சிட்டி, உஷா கிரண் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவற்றை துவக்கி சிறப்பாக நடத்தி வந்த இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு கடந்த 2016ல் பத்ம விபூஷண் விருதை வழங்கியுள்ளது.ராமோஜி ராவின் மறைவையொட்டி நேற்றும், இன்றும் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி இரண்டு நாட்களும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.