கொச்சி,: 'வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி சாலையோர மரங்களை வெட்டக் கூடாது' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு பாலக்காடு - பொன்னானி சாலையில் உள்ள தங்கள் வணிக கட்டடத்துக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரி, வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கேரள பொதுப் பணித் துறையினரிடம் விண்ணப்பித்தனர். அதை ஏற்றுக் கொண்ட பொதுப் பணித் துறை அதிகாரிகள், இந்த விண்ணப்பத்தை வனத் துறையினருக்கு அனுப்பி வைத்தனர். ஒப்புதல்
சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட வனத் துறையினர், மரங்கள் இடையூறாக இல்லை எனக் கூறி அதற்கு அனுமதி மறுத்ததுடன், அந்த விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதை எதிர்த்து மனுதாரர் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 22ல் விசாரணைக்கு வந்த போது நீதிபதி அளித்த உத்தரவில் கூறப்படுவதாவது:சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் கோரிக்கையை போதுமான காரணமின்றி அனுமதிக்க முடியாது என்பதை கேரள அரசு கவனிக்க வேண்டும். மரங்கள் குளிர்ந்த நிழல்களையும், சுத்தமான ஆக்ஸிஜனையும், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தங்கும் இடத்தையும் தருகின்றன. அரசு நிலங்களில் வளரும் மரங்களை வெட்டி அகற்றுவதை ஒழுங்குபடுத்துவதற்காக, 2010ல் அமைக்கப்பட்ட கமிட்டியின் ஒப்புதல் இன்றி மரங்களை வெட்டக் கூடாது. பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தேவையின்றி தொங்கும் மரத்தின் கிளைகளை வெட்டலாமே அன்றி மரங்களை வெட்டக் கூடாது. நடவடிக்கை
குறிப்பாக, வணிக நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சாலையோர மரங்களை வெட்டக் கூடாது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகள் தரப்பில் இருந்து கடமை தவறியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம். மரங்களை பாதுகாப்பது அரசு அதிகாரிகளின் கடமை. ஒரு கட்டடத்தைப் பாதுகாக்க அல்லது குடிமகனின் வணிகச் செயல்பாட்டைப் பாதுகாக்க, மரங்களை வெட்டி அகற்ற முடியாது.இந்த விஷயத்தை மாநில அரசு தீவிரமாக கையாள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் தரப்பிலிருந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு கட்டடத்தையோ, வணிக செயல்பாட்டையோ பாதுகாப்பதற்காக, சாலையோர மரங்களை வெட்டும் நடவடிக்கையை ஏற்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.