பெங்களூரு : வால்மீகி வளர்ச்சி ஆணைய அதிகாரி தற்கொலை வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு, கர்நாடக அரசு ஒப்படைத்து உள்ளது. அமைச்சர் நாகேந்திரா பதவி விலக மாட்டேன் என்று கூறி உள்ளார்.பெங்களூரு வசந்த்நகரில் உள்ள வால்மீகி சமூக வளர்ச்சி ஆணைய கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சந்திரசேகர், 52. நேற்று முன்தினம் இரவு ஷிவமொகா டவுன் வினோபாநகரில் உள்ள வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரூ.85 கோடி முறைகேடு
அவர் எழுதி இருந்த கடிதத்தில், 'வால்மீகி சமூக வளர்ச்சி ஆணையத்திற்கு அரசிடம் இருந்து, 187 கோடி ரூபாய் நிதி வந்தது. ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் பத்மநாபா, கணக்கு அதிகாரி பரசுராம் துக்கண்ணவர், வங்கி அதிகாரி சுஷிஷ்மதா ரவுல் ஆகியோர், 187 கோடி ரூபாயில், 85 கோடி ரூபாயை, பல வங்கி கணக்குகளுக்கு மாற்றி முறைகேடாக பயன்படுத்தினர்.'இதுபற்றி கேட்ட போது, எனக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் தற்கொலை செய்கிறேன். எனது சாவுக்கு மூன்று பேரும் தான் காரணம்' என்று எழுதி இருந்தார். இந்த கடிதத்தின்படி வினோபாநகர் போலீசார், மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் சந்திரசேகர் மரணத்திற்கு பொறுப்பு ஏற்று, பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் பதவியை ராஜினாமா செய்ய அவர் மறுத்து விட்டார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:வால்மீகி சமூக வளர்ச்சி ஆணைய கண்காணிப்பாளர், சந்திரசேகர் தற்கொலை செய்தார் என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது. ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட 187 கோடி ரூபாயில் முறைகேடு நடந்து இருப்பதாக, ஊடகங்கள் மூலம் எனக்கு தெரியவந்தது. நிர்வாக இயக்குனர் பத்மநாபாவிடம் கேட்ட போது, எனக்கு தெரியாமல் எனது கையெழுத்தை பயன்படுத்தி உள்ளனர் என்று, என்னிடம் கூறினார்.அவரது கையெழுத்தை, தடய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளோம். அவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுப்போம். இந்த வழக்கில் யாரையும் காப்பாற்ற மாட்டோம். சந்திரசேகர் தற்கொலையில் எனது பங்கு இல்லை. நான் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும். வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு ஒப்படைத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மனைவி கண்ணீர்
சந்திரசேகரின் மனைவி கவிதா, கண்ணீர்மல்க அளித்த பேட்டி:என் கணவர் எந்த தவறும் செய்யவில்லை. அரசு பணத்தை கொள்ளை அடிக்கவில்லை. மரண கடிதத்தில் அவர் அனைத்தையும் குறிப்பிட்டு உள்ளார். எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தால், அவர் தற்கொலை செய்து இருப்பார். அவர் சாவுக்கு காரணமான யாரையும், அரசு சும்மா விட கூடாது. அரசின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.எஸ்.ஐ.டி., அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். எனது கணவரின் லேப்டாப்பில் இருந்த சில தகவல்களை, பென்டிரைவில் பதிவு செய்து எடுத்து சென்றனர். அந்த பென்டிரைவில் என்ன இருக்கிறது என்று தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.