| ADDED : ஜூன் 12, 2024 11:03 PM
பாகல்கோட்: புற்றுநோயால் இறந்த கணவரின் உடலை, வீட்டுக்குள் விடாததால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.பாகல்கோட், பனஹட்டி நகரின், சோமவாரபேட்டில் வசித்தவர் குரு கித்துாரு, 51. புற்று நோயால் அவதிப்பட்ட அவர், கடந்த இரண்டு மாதங்களாக மனைவியின் வீட்டில் வசித்து வந்தார்.தனக்கு நோய் வந்ததால் விரக்தியடைந்த குரு கித்துாரு, சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், பனஹட்டி நகரின், வைபவா திரையரங்கு அருகில் சாலை ஓரத்தில் இறந்து கிடந்தார்.இதை கண்ட அப்பகுதியினர், குரு கித்துாருவின் உடலை, அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் மனைவியும், அவரது குடும்பத்தினரும் உடலை வீட்டுக்குள் கொண்டு வர வேண்டாம் என, பிடிவாதம் பிடித்தனர். அவருக்கு இருந்த நோய், தங்களுக்கு தொற்றும் என, அஞ்சினர். இதனால் வீட்டின் முன்பாக இருந்த மின் கம்பத்தில் முட்டு கொடுத்து, உடலை அமர்த்தினர்.இதை கண்ட தொண்டு அமைப்பினர், குரு கித்துாரின் குடும்பத்தினருக்கு அறிவுரை கூறினர். அதன்பின் உடலை வீட்டுக்குள் கொண்டு சென்று, இறுதி சடங்குகளை செய்தனர்.