உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளிக்கு புகழ் கிடைப்பதற்காக 2ம் வகுப்பு மாணவன் நரபலி

பள்ளிக்கு புகழ் கிடைப்பதற்காக 2ம் வகுப்பு மாணவன் நரபலி

ஹாத்ரஸ்: உத்தர பிரதேசத்தில், பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழுக்காக இரண்டாம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பள்ளியின் உரிமையாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில், டி.எல்., பப்ளிக் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மாந்திரீகம்

இந்த பள்ளியின் உரிமையாளர் ஜசோதன் சிங், மாந்திரீகம் மற்றும் சூனியம் போன்ற மூட சடங்குகளில் நம்பிக்கை உடையவர்.ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால், பள்ளி மேலும் வளர்ச்சி அடையும், பிரபலமான பள்ளியாக மாறும் என, பள்ளியின் இயக்குனரும், தன் மகனுமான தினேஷ் பாகேலிடம், ஜசோதன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 23ம் தேதி, பள்ளி முதல்வர் லக் ஷ்மண் சிங், ஆசிரியர்கள் ராம்பிரகாஷ் சோலங்கி, வீர்பால் சிங் ஆகியோர் உதவியுடன், பள்ளி விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்த கிருதார்த், என்ற மாணவனை, தினேஷ் பாகேல் கடத்தினார்.ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாணவனை அவர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது விழித்துக் கொண்ட மாணவன் அழத் துவங்கினான். இதையடுத்து, மாணவன் கிருதார்த்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். கிருதார்த்துக்கு உடல்நிலை சரியில்லை என்றும், காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும், அவனது பெற்றோருக்கு பள்ளி இயக்குனர் தினேஷ் பாகேல் மொபைல் போனில் தகவல் தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை

தினேஷ் பாகேலின் காரை தடுத்து நிறுத்திய கிருதார்த் பெற்றோர், தன் மகன் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவன் கிருதார்த் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், பள்ளி உரிமையாளர் ஜசோதன் சிங், அவரது மகனும், பள்ளி இயக்குனருமான தினேஷ் பாகேல், பள்ளி முதல்வர் லக் ஷ்மண் சிங் மற்றும் ஆசிரியர்கள் ராம்பிரகாஷ் சோலங்கி, வீர்பால் சிங் ஆகியோரை கைது செய்தனர்.விசாரணையில், பள்ளி மற்றும் குடும்பத்தின் வளர்ச்சிக்காக, மாணவனை நரபலி கொடுத்ததை ஜசோதன் சிங் ஒப்புக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ