5.8 ரிக்டர் அளவுக்கு அசாமில் நிலநடுக்கம்
குவஹாத்தி:வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. அசாமின் குவஹாத்தி நகரில் நேற்று மாலை 4:41 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் உடல்குரி நகரை மையமாக கொண்டு, 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், வடகிழக்கு மாநிலங்களிலும், அண்டை நாடான பூட்டானிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தின் போது வீடுகள், நாற்காலி உள்ளிட்டவை ஆடியதாக கூறப்படுகிறது. இதனால் குவஹாத்தியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தெருவில் தஞ்சமடைந்தனர். எனினும் பொருட் சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அதிக நிலநடுக்க அதிர்வு மையத்தில் வருவதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, கடந்த 2ம் தேதி அசாமின் சோனித் பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம், 3.5 ரிக்டராக பதிவாகியிருந்தது.