| ADDED : நவ 24, 2024 09:33 PM
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் வருகை மூலம் கடந்த 9 நாட்களில் 41 கோடி ரூபாய் வருவாய் கிட்டியுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.15ம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் முதல், பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகின்றனர்.முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, பக்தர்களை ஒழுங்குபடுத்துவது, விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் அவர்களின் வசதிக்காக 6 மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.இந் நிலையில், 9 நாட்களில் மட்டும் 6 லட்சம் பக்தர்கள் சபரிமலை வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களின் வருகையால் 41 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் பிரசாந்த் கூறியதாவது; நவ.16ம் தேதி முதல் 6,12,290 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு இதே தருணத்தில் 3,03,501 பேர் தான் தரிசனத்துக்கு வந்திருந்தனர். பக்தர்கள் எண்ணிக்கை போல், வருவாயும் அதிகரித்துள்ளது. இம்முறை ரூ.41.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் எந்த இடையூறும் இன்றி, தரிசனம் செய்ய வசதியாக, வண்டி பெரியார் சத்திரம், எருமேலி, பம்பா ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மணப்புரத்தில் ஆன்லைன் புக்கிங் செய்யும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஊர் திரும்புவார்கள் என்ற சூழலே இம்முறை இல்லை. தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் மறவாமல் தங்களின் ஆதார் அட்டை அல்லது அதன் நகல் கொண்டு வருதல் அவசியம். அதன் மூலம் உடனடி முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.