UPDATED : செப் 12, 2024 08:04 PM | ADDED : செப் 12, 2024 11:43 AM
லக்னோ: அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த நேரத்தில் நோயாளி மொபைலை பயன்படுத்தி உள்ளார்.நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ப அதிநவீன சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் உ.பி.,யின் லக்னோவில் உள்ள கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனை டாக்டர்கள் புது சாதனை ஒன்றை படைத்து உள்ளனர்.பக்கவாத அபாயம்
லக்னோவை சேர்ந்த ஹரிஸ்சந்திரா பிரஜாபதி (56) என்பவர், கடுமையான தலைவலி, இடது கை மற்றும் கால்கள் பலவீனமான நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்ததுடன், இதனால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அவரை கல்யாண் சிங் புற்றுநோய் மையத்தில் அனுமதித்தனர்.சிகிச்சை
அவருக்கு ' அவேக் கிரனியோடோமி' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதன்படி, ஹரிஸ்சந்திரா பிரஜாபதிக்கு தலையில் மட்டும் 'அனஸ்தீசியா' மருந்தை செலுத்தி உணர்விழக்க செய்தனர். தொடர்ந்து மொபைலில் விளையாடவும், பேனாவை கையில் வைத்திருக்கவும் செய்த டாக்டர்கள், காலை அசைக்க செய்தனர். இதன் மூலம் நரம்பை கண்காணிக்கும் கருவியை பயன்படுத்தி கட்டி இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து அதனை அகற்றினர். இதன் மூலம் நரம்பு பாதிப்பு ஏற்படும் பிரச்னையை தவிர்க்க முடிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.