புதுடில்லி :நம் படைகளுக்கு நீர்மூழ்கி கப்பலுக்கான ஏவுகணைகள், முன்னெச்சரிக்கை செய்யும் விமான தொழில்நுட்பம், பீரங்கி வாகனங்களுக்கான இன்ஜின் உள்ளிட்ட, 54,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு, ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ அமைச்சகம் இந்தாண்டை, சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. இதன்படி, கொள்முதல்களில் ஒப்புதல் அளிப்பதற்காகும் காலத்தை இன்னும் குறைப்பதற்கு சில நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடந்த ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலம் வெகுவாக குறையும். இதற்கேற்ப நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.வானில் இருந்து வரும் ஆபத்துகளை முன்னதாகவே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் போர் விமானங்களுக்கான தொழில்நுட்ப சாதனம், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து செலுத்தக் கூடிய ஏவுகணைகள், டி-90 பீரங்கி வாகனங்களுக்கான இன்ஜின்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவும், கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.இவை, 54,000 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
அமெரிக்காவுடன் பேச்சு
அமெரிக்க ராணுவத்தின் அமெரிக்கா - இந்தோ பசிபிக் பிரிவின் தலைமை தளபதி, அட்மிரல் சாமுவேல் பாபரோ, கடந்த 16 - 19ல் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நம் ராணுவத்தின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனைகள் நடத்தினார்.இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இரு நாட்டுக்கும் இடையேயான 10 ஆண்டு ராணுவ செயல்திட்டத்தை நீட்டிப்பது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.