உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கிறோமா?  லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா பளிச்!

 மாநிலங்களை நாங்கள் புறக்கணிக்கிறோமா?  லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா பளிச்!

புதுடில்லி, ''பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்ப வேண்டாம். எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை,'' என, எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முந்தைய பட்ஜெட் உரையை நினைவுபடுத்தி லோக்சபாவில் நேற்று காரசாரமாக பேசினார்.சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2024 - 25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆந்திராவுக்கு 15,000 கோடி ரூபாயும், பீஹாருக்கு 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.மேலும், பட்ஜெட் உரையில் தமிழகம் உட்பட 17 மாநிலங்களின் பெயர்கள் கூட இடம் பெறவில்லை என விமர்சித்த எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டின.

கேள்வி கேட்கலாம்

தன் பட்ஜெட் நிறைவு உரையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:இந்த பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. அப்படியொரு தோற்றத்தை உருவாக்க, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன்... அவர்கள் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்களில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளனரா? கடந்த 2004 - 05ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், 17 மாநிலங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அந்த மாநிலங்களுக்கு நிதி சென்று சேரவில்லையா? அப்படி அவர்கள் நிதியை நிறுத்தி வைத்து இருந்தால் இப்போது எங்களிடம் கேள்வி கேட்கலாம்.அதேபோல, 2005 - 06 பட்ஜெட்டில் 18 மாநிலங்களின் பெயர்களும், 2007 - 08ல் 16 மாநிலங்களின் பெயர்களும், 2009 - 10ல் 20 மாநிலங்களின் பெயர்களும் விடுபட்டு இருந்தன.பட்ஜெட்டில் பெயர் இடம் பெறாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பொய் பிரசாரம் செய்து மக்களை திசை திருப்பாதீர்கள். உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக நாம் உள்ளோம். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் மூலதன செலவின உந்துதல் காரணமாக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளோம்.

இலக்கு நிர்ணயம்

கடந்த 2023 - 24ல் நிதிப் பற்றாக்குறை, 5.6 சதவீதமாக இருந்தது; இதை, 4.9 சதவீதமாக குறைக்க நடப்பு நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; 2025 - 26ல், 4.5 சதவீதமாக குறையும். இந்த பட்ஜெட்டில் ஜம்மு - காஷ்மீருக்கு 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜம்மு - காஷ்மீர் போலீஸ் துறையின் செலவுக்கான 12,000 கோடி ரூபாயும் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.அதன் பின், 2024 - 25ம் நிதியாண்டுக்கான 48.21 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட், லோக்சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

அல்வா விமர்சனத்துக்கு பதில்!

பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பான அல்வா கிண்டும் பாரம்பரிய நிகழ்வு குறித்து விமர்சித்து லோக்சபாவில் ராகுல் நேற்று முன்தினம் பேசினார். இதற்கு அமைச்சர் நிர்மலா நேற்று பதில் அளித்து பேசியதாவது:நம் பாரம்பரியப்படி எந்தவொரு நல்ல நிகழ்வுக்கு முன்பும், இனிப்பு சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தான் பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிண்டும் நிகழ்வு காலங்காலமாக நடக்கிறது. இதை ராகுல் விமர்சித்து பேசியது வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kesavan
ஆக 03, 2024 09:25

ஒரு திருத்தம் மாநிலங்களை நீங்கள் புறக்கணிக்கவில்லை உங்களை புறக்கணித்த மாநிலங்களை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் ஆனால் அந்த மாநிலங்கள் இருந்து மட்டும் வரிவருவாய் பெற்றுக் பெற்றுக் கொள்கிறீர்கள் இதுதான் இங்கு பிரச்சனை நீங்கள் உங்களைப் புறக்க புறக்கணித்த மாநிலங்களில் இருந்து வரி வருவாய் பெற்றுக் கொள்ளாவிட்டால் உங்களிடம் மாநிலங்களை புறக்கணிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டிய அவசியமே இருக்காது ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் தமிழ்நாட்டின் வரி வருவாயை கொண்டு உத்தரப்பிரதேசத்தை வாழ வைக்கிறீர்கள் ஆனாலும் அது வளராது வாழாது


Kesavan
ஆக 03, 2024 09:22

ஒரு திருத்தம் நீங்கள் மாநிலங்களை புறக்கணிக்கவில்லை உங்களை புறக்கணித்த மாநிலங்களை நீங்கள் நிதி தராமல் புறக்கணிக்கிறீர்கள் என்பதுதான் குற்றச்சாட்டு உங்களைப் புறக்கணித்த மாநிலங்களில் இருந்து அந்த மக்களின் வரி வருவாய் பெற்றுக்கொண்டு அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் திமிர்த்தனமாக நடந்து கொள்வது விமர்சனத்திற்கு தான் உள்ளாகும் பிஜேபியிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மைதான் பிரச்சனையை என்னவென்றால் உங்களைப் புறக்கணித்த மாநிலங்களில் இருந்து நீங்கள் எந்த வரி வருவாயையும் பெற்றுக் கொள்ளாதீர்கள் அப்போது இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி