காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி: பாதுகாப்புப் படையினர் முறியடிப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.பாராமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு கண்காணிப்பையும், ரோந்தையும் அவர்கள் தீவிரப்படுத்தினர்.அடர் வனப்பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர். இருதரப்பிலும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சிறிதுநேரம் நீடித்த இந்த சண்டையைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனர்.அவர்கள் இன்னும் அடர் வனப்பகுதியில் எங்கேனும் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.