பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது ரயில்வே அமைச்சகம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரயில்வே துறை குறித்து பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி எச்சரித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில்நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில், ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா? என்பது குறித்து டில்லியின் அனந்த் விஹார் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் குறித்து பயணிகளிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது, அவர் கூறியதாவது; பயணிகளின் சவுகரியமும், பாதுகாப்பும் தான் எங்களுக்கு முக்கியம். ரயில்வே குறித்து பொய்யான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை மக்கள் ஈடுபடக் கூடாது, எனக் கூறினார்.நேற்று முன்தினம் டில்லி ரயில்நிலையத்தில் கட்டப்பட்டு வரும் பயணிகள் தங்குமிடத்தை ஆய்வு செய்த அவர், பயணிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.