சுள்யாடி விஷ பிரசாதம் வழக்கு மடாதிபதிக்கு ஜாமின் மறுப்பு
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ் நகர் ஹனுாரின் மலை மஹாதேஸ்வரா மலையின் சுள்யாடி கிராமத்தில் உள்ள சாலுார் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாரம்மா கோவிலில், 2018 டிசம்பர் 14ம் தேதி, திருவிழா நடந்தது.இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டனர்.இவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சுள்யாடி போலீசார், கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர்.அதன்பின் விசாரணை நடத்தி, சாலுார் மடத்தின் இளைய சுவாமிகள் இம்மடி மஹாதேவசாமி, அம்பிகா, மஹாதேவசாமி, தொட்டய்யா ஆகியோரை கைது செய்தனர்.மடத்தின் மூத்த மடாதிபதிக்கு, அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், பிரசாதத்தில் விஷம் கலந்தது தெரிந்தது.கைதான நாளில் இருந்தே, நால்வரும் மைசூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்மடி மஹாதேவசாமி தன் உடல் நிலையை காரணம் காட்டி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.சாம்ராஜ் நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், இம்மடி மஹாதேவசாமி மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை நடத்திய நீதிபதி பாரதி, மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார்.