ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் பெங்., போலீசார் விதிமுறை வெளியீடு
பெங்களூரு: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில், எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க, பெங்களூரு போலீசார் விதிமுறைகள் வகுத்துள்ளனர். பார்ட்டிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்போர், இவற்றை பின்பற்ற வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர்.பெங்களூரு போலீசார் வெளியிட்ட விதிமுறை: புத்தாண்டை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். சட்டம், விதிமுறைகளை பின்பற்றுங்கள். விதிமுறைப்படி வாகனம் ஓட்டுங்கள். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். அமைதி, ஒழுங்கை காப்பாற்ற போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகளுடன் பொது மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள். போலீசார் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள், அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்த இடங்களில் மட்டும், புத்தாண்டு கொண்டாடுங்கள். அவசர சந்தர்ப்பங்களில், 112 அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளுங்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அக்கம், பக்கத்தினர் பாதுகாப்பில் அக்கறை காட்டுங்கள். அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் கொண்டாடுங்கள். அதிக மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் விழிப்புடன் இருங்கள். சட்டவிரோத செயல்கள் நடப்பது தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தாருங்கள். புத்தாண்டு கொண்டாடும் இடங்களில், பெண்கள், சிறார்கள் விலை உயர்ந்த நகைகளை அணியாமல் இருப்பது நல்லது. மொபைல் போன் மற்றும் பணத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். மற்ற மதத்தவருக்கு பாதிப்பு ஏற்படாமல், புத்தாண்டு கொண்டாடுங்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஊர்க்காவல் படையினருக்கு ஒத்துழைப்பு தாருங்கள். ஆட்டோ, வாடகைக் காரில் பயணிக்கும் போது, பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். போலீசார் சுட்டி காட்டிய சாலைகளிலேயே பயணிக்க வேண்டும். செய்ய கூடாதவை
மதுபானம் அருந்தி, போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்ட கூடாது. அது சட்டவிரோதம். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. சுற்றுச்சூழல் பாழாவதை தவிருங்கள்.* தேவையின்றி சத்தமாக ஹார்ன் அடிக்க கூடாது.* அதிவேகமாக, அலட்சியமாக வாகனம் ஓட்ட கூடாது.* போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம், அனுமதி பெறாத இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த கூடாது.* வயதானவர்கள், நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படாமல், புத்தாண்டு கொண்டாடுங்கள். போலீஸ் பேரிகேட்களை தாண்ட கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில், குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் நுழையாதீர்கள். பொது இடங்களில் சிகரெட் புகைப்பது சட்டவிரோதம். பொது இடங்களில் தேவையின்றி, கூட்டம் சேராதீர்கள். கொண்டாட்டத்தின் போது, தெரு விளக்கு உட்பட, பொது சொத்துகளை சேதப்படுத்த கூடாது. சமுதாயத்தின் அமைதியை குலைக்க கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அறிமுகம் இல்லாதோரிடம் பேசவோ, வாக்குவாதம் செய்யவோ கூடாது.