பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கணக்குகளை தேஜ கூட்டணி சுக்குநூறாக்கியுள்ளது. பிரதமர் மோடியின் மீதும், நிதிஷ்குமார் மீதும் மக்கள் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையை இந்த முடிவுகள் வெளிக்காட்டுவதாக உள்ளன.243 தொகுதிகளைக் கொண்ட பீஹார் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே, பாஜ மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் 190 இடங்கள் முன்னிலை வகித்துள்ள நிலையில், பாஜவும், ஜேடியுவும் தலா 80 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன.ஓட்டுத் திருட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஆர்ஜேடியும், காங்கிரசும் இந்த முறை எப்படியும் தேஜ கூட்டணியை வீழ்த்தி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தன. ஆனால், நிலைமை அப்படியே தலைகீழானது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி வெறும் 49 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட மிகக் குறைவானதாகும். மொத்தம் 4 முறை ஆட்சியமைத்துள்ள நிதிஷ் குமார் மீண்டும் 5வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு பல்வேறு காரணங்களை அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறியதாவது; ஒரு கட்சி இருமுறை ஆட்சி அமைத்தாலே மக்களிடையே சலிப்பு ஏற்பட்டு விடும் என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், பீஹார் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களின் எண்ணமும், சிந்தனையும் வேறு மாதிரியாக அமைந்திருப்பது, இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன. ஏனெனில், 1990 காலகட்டங்களில் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் ஆட்சி காலங்களில், இதுபோன்று தேர்தல் நடைபெற்றால், வாக்குச்சாவடிகளை குண்டர்கள் கைப்பற்றுவதும், மறுதேர்தல் நடத்துவதும் வாடிக்கையாகி இருந்தது. இதனால், தேர்தல்கள் மாதக்கணக்கில் நடந்த வரலாறு பீஹாரில் உண்டு. இப்படித்தான் லாலுவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருந்து வந்தது. இது மக்களிடையே ஒருவிதமான வெறுப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், 2015ம் ஆண்டு நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்றார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டே பீஹாரில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, மாநிலத்தில் குற்றச் செயல்கள் குறைந்தன. குறிப்பாக, குண்டர்களின் அராஜகங்கள் ஒடுக்கப்பட்டு, தேர்தல்கள் சுமூகமாக நடந்தன. இதன்மூலம், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது.எனவே, 2025 சட்டசபை தேர்தலில் தேஜஸ்வி யாதவ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், லாலு யாதவின் காட்டாட்சி மீண்டும் கட்டவிழ்த்து விடப்படுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, இண்டி கூட்டணியினரின் பிரசாரத்தை தாண்டி, மோடிக்கும் நிதிஷ்குமாருக்கும் மக்கள் ஓட்டுக்களை வாரி குவித்துள்ளனர், இவ்வாறு கூறியுள்ளனர்.