உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., சதியை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் வெளியிட போலீஸ் தடுப்பதாக குற்றச்சாட்டு

பா.ஜ., சதியை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் வெளியிட போலீஸ் தடுப்பதாக குற்றச்சாட்டு

புதுடில்லி:“ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் மற்றும் சதி திட்டங்களை அம்பலப்படுத்தும் ஆவணப் படத்தை திரையிட டில்லி மாநகர போலீஸ் தடுக்கிறது,” என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், ஆவணப்படம் திரையிட அனுமதி பெறவில்லை என போலீஸ் கூறுகிறது. ஒரு ஆவணப்படத்தை தனிப்பட்ட முறையில் திரையிட ஏன் அனுமதி பெற வேண்டும்?ஆம் ஆத்மி தயாரித்துள்ள 'அன்பிரேக்கபிள்' என்ற-- ஆவணப்படத்தில்- ஊடகங்களுக்கு திரையிடப்படும். இந்தப் படத்தில் எந்த அரசியல் நிகழ்ச்சியும் இல்லை. எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் இதில் காட்சிகள் இடம்பெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் மற்றும் சதிகளை மட்டுமே இந்தப் படத்தில் கூறியுள்ளோம். பா.ஜ.,வின் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. அதனால், இந்தப் படத்தை மக்கள் பார்த்துவிடக் கூடாது என பா.ஜ., பயப்படுகிறது.

வாடகை வீடு

டில்லி முழுவதும் எங்கு சென்றாலும் வாடகை வீட்டில் வசிப்பவர்களை சந்தித்துப் பேசுகிறேன். சர்வதேச தரத்திலான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளால் தாங்கள் பயனடைவதாக கூறுகின்றனர். அதேநேரத்தில், இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் திட்டங்கள் வீட்டு உரிமையாளர்களுக்கு சென்று விடுவதாகவும், தங்களுக்கு அந்தப் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தேர்தல் முடிந்து ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த வாடகை வீடுகளில் வசிப்போருக்கு இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை கடந்த ஆண்டு வழக்குகள் பதிவு செய்து, முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் மற்றும் அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் உட்பட அக்கட்சியின் பல தலைவர்களை கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது. ஆம் ஆத்மி தலைவர்கள் தற்போது ஜாமினில் உள்ளனர்.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்போது, எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் அனுமதி பெற வேண்டும். ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய ஆவணப் படத்தை திரையிட அனுமதி பெறவில்லை. எனவே, இது நடத்தை விதிமுறைகளை மீறும் செயல்'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை