துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்திப்பு
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, முன்னாள் அமைச்சர் கோபாலய்யா சந்தித்துப் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரின், மஹாலட்சுமி லே - அவுட் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கோபாலய்யா. 2019ல் இவர், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பா.ஜ., அரசில் கலால் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.கடந்த சட்டசபை தேர்தலிலும், இதே தொகுதியில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வானார். சமீப நாட்களாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் பார்வை, காங்கிரஸ் மீது பதிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பே, காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதில் கோபாலய்யாவும் ஒருவர்.ஏற்கனவே யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். இவர் எந்த நேரத்திலும், கட்சி தாவக்கூடும்.இந்நிலையில் மஹாலட்சுமி லே - அவுட் எம்.எல்.ஏ., கோபாலய்யா, துணை முதல்வர் சிவகுமாரை நேற்று, பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில், சந்தித்துப் பேசினார். இது பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.