பஸ் கவிழ்ந்து விபத்து; ஜார்க்கண்டில் 7 பேர் பரிதாப பலி; பலர் காயம்
ராஞ்சி: ஜார்க்கண்டில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர்.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாக் மாவட்டத்திலிருந்து பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பாட்னா நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது கோர்ஹர் போலீஸ் ஸ்டேஷன் அருகே பஸ் சாலையில் திரும்பும் போது, எதிர்பாராவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் பலத்த காயமுற்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 'பஸ்சை டிரைவர் அதி வேகமாக இயக்கி உள்ளார். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது' என எஸ்.பி., அரவிந்த் குமார் சிங் தெரிவித்தார்.