உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலை மஹாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்த ஆலோசனை

மலை மஹாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்த ஆலோசனை

பெங்களூரு: கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்காக, கலபுரகியில் அமைச்சரவை கூட்டம் நடத்தியதை போன்று, பின் தங்கிய சாம்ராஜ்நகர் மாவட்டம், மலை மஹாதேஸ்வரா மலையிலும் அமைச்சரவை கூட்டம் நடத்த, மாநில அரசு ஆலோசிக்கிறது.மைசூரில் இருந்த சாம்ராஜ்நகர், 1997 ஆகஸ்ட் 15ல் தனியாக பிரிந்து, தனி மாவட்டமானது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியம், இம்மாவட்டத்துக்கு வந்தால், பதவி பறிபோகும் என்ற, அன்றைய முதல்வர்களின் மூட நம்பிக்கையாலும், சாம்ராஜ்நகர் பின் தங்கிய மாவட்டமாகவே உள்ளது; முன்னேற்றம் அடையவில்லை.

இயற்கை வளங்கள்

சாம்ராஜ்நகர், குண்டுலுபேட், எளந்துார், கொள்ளேகால், ஹனுார் தாலுகாக்களைச் சேர்ந்த மக்கள், இன்றைக்கும் பல தேவைகளுக்கு மைசூரையே நம்பியுள்ளன. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடந்தும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களே அதிக அளவில் வசிக்கின்றனர்.கேரளா, தமிழகம் அருகிலேயே இருந்தும், வியாபாரம், வர்த்தகம் அவ்வளவாக இல்லை.சாம்ராஜ்நகருக்கு வந்தால், முதல்வர் பதவி பறிபோகும் என்பது, சில அரசியல் வாதிகளின் நம்பிக்கையாகும். எடியூரப்பா, குமாரசாமி உட்பட பலர் முதல்வராக இருந்தபோது, சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வரவே இல்லை.ஆனால் இன்றைய முதல்வர் சித்தராமையா, முதன் முறை முதல்வரான போதும், பல முறை சாம்ராஜ்நகருக்கு வந்தார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார்.இரண்டாவது முறை முதல்வரானபோதும், பல முறை சாம்ராஜ்நகருக்கு சென்று வந்துள்ளார். இதன் மூலம் மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்தார். இவரது தலைமையில், மலை மஹாதேஸ்வரா மலையில் அமைச்சரவை கூட்டம் நடந்தால், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், முதன் முறையாக அமைச்சரவை கூட்டம் நடந்ததாக இருக்கும்.

திட்டங்கள்

இதுதொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா கூறியதாவது:கடந்த 2002ல், எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது, பிலிகிரி ரங்கன மலையில், மினி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இப்பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களின் நலனுக்காக, பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்காக, கலபுரகியிலும் மாநில அரசு அமைச்சரவை கூட்டம் நடத்தியது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, இத்தனை ஆண்டுகளாகியும், அடிப்படை வசதிகள் காணாத, எண்ணிலடங்கா பக்தர்களின் புண்ணிய தலமான மலை மஹாதேஸ்வரா மலையில், அமைச்சரவை கூட்டம் நடத்துவது குறித்து அரசு ஆலோசிக்கிறது.மைசூரு மாவட்டத்தில், பாக்கியுள்ள பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் விவரித்துள்ளார். இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதேபோன்று சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கும், நலத்திட்டங்கள் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை