கேமரா கண்ணாடியால் கேரள கோவிலில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த சுரேந்திர ஷா, 66, இந்தக் கோவிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். வினோதமான வகையில் கண்ணாடி அணிந்து சென்றவரை ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது, 'ஸ்மார்ட் கிளாஸ்' என அழைக்கப்படும் கேமராவுடன் கூடிய கண்ணாடியை அவர் அணிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோவிலின் உள்ளே படம் பிடிக்கவும், கேமரா எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், கேமரா கண்ணாடி அணிந்து சென்ற சுரேந்திர ஷாவை தடுத்த கோவில் பாதுகாவலர்கள், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, அவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தவறான செயல்கள் எதுவும் கண்டறியப்படாததை அடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என சுரேந்திர ஷாவுக்கு நோட்டீஸ் வழங்கினர்.