| ADDED : மார் 18, 2024 06:09 AM
துமகூரு, : அரசு பணிகளை டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், கான்ட்ராக்டரை தாக்கிய, குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் மீது வழக்கு பதிவாகி உள்ளது.கர்நாடகா கிராம பஞ்சாயத்து துறை சார்பில், துமகூரில் சில பணிகள் செய்யப்பட உள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 14ம் தேதி, துமகூரு பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடந்தது. துமகூரு காங்கிரஸ் பிரமுகரும், கான்ட்ராக்டருமான ராயசந்திரன் ரவிகுமார், குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளருக்கு, டெண்டர் கிடைத்தது. ஆனால் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்ததாக கூறி, பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு, ராயசந்திரன் ரவிகுமார் போராட்டம் நடத்தினார். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ., சீனிவாஸ், ஆதரவாளர்களுடன் சேர்ந்து, ராயசந்திரன் ரவிகுமாரை தாக்கி உள்ளார். பலத்த காயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாக்குதல் குறித்த புகாரின்படி, சீனிவாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, ஏழு பிரிவுகளில் திலக்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விசாரணை நடக்கிறது.