பாட்னா: பீஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, மாறுப்பட்ட தகவல்கள் வெளியான நிலையில், 'ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாற்றம் எதுவும் இல்லை' என தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை பீஹார் தேர்தல் கமிஷன் துரிதப்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பீஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்படி, கடந்த மாதம் 24ல் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.ஒவ்வொரு வாக்காளரின் ஓட்டுரிமையை உறுதி செய்யவும், பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என, தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. எதிர்ப்பு
இது தொடர்பான அறிவிப்பில், '2023ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும், தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான சான்றுகளை இந்த திருத்தப் பணிகளின் போது சமர்ப்பிக்க வேண்டும். 'இவர்களில், 1981, ஜூலை 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். 'ஆதார் மற்றும் பான் அட்டை அல்லாத வேறு ஆவணங்கள் சான்றாக இணைக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி ஜூலை 25' என தெரிவிக்கப்பட்டது.நம் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்தைச் சேர்ந்தோர், பீஹாரில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ஆவணங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது.பீஹாரின் முக்கிய எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்டவை தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 'இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்படும். ஆகையால், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்' என, அக்கட்சியினர் வலியுறுத்தினர்.ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அரசுசாரா அமைப்பு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது. மாற்றமில்லை
தேர்தல் கமிஷன் அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எதிர்க்கட்சியினர் எச்சரித்தனர்.இதையடுத்து, பீஹாரில் நேற்று வெளியான அனைத்து நாளிதழ்களிலும், மாநில தேர்தல் கமிஷன் சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், 'வாக்காளர் திருத்தப் பணியின் போது, விண்ணப்பங்களை மட்டும் தற்போது பூர்த்தி செய்து தரலாம். தேவையான சான்றுகள் மற்றும் ஆவணங்களை வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது, விண்ணப்பங்கள் மட்டும் சமர்ப்பித்தால் போதும்; அதற்கான சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இணைக்கத் தேவையில்லை' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.இது, பீஹார் மக்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இது தொடர்பாக தேர்தர் கமிஷன் நேற்று விளக்கம்அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூன் 24ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பை முழுமையாக படிக்காமல், பலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். தவறான அறிக்கைகளால், மக்களை அவர்கள் குழப்புகின்றனர். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை. விண்ணப்பங்களை இப்போதும், அது தொடர்பான ஆவணங்களை வரும் 25ம் தேதி வரையும் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மே.வங்கத்திலும் நடத்த வேண்டும்
பீஹாரில் நடத்தப்படுவது போல், மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் வாயிலாக, போலி ஆதார் அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை சட்டவிரோதமாகப் பெற்று வங்கதேசத்தில் இருந்து வந்த ரோஹிங்கியாக்கள் கண்டறியப்பட வேண்டும். போலி ஆவணங்கள் வாயிலாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட வேண்டும்.சுவேந்து அதிகாரிமேற்கு வங்க பா.ஜ., தலைவர்
திரிணமுல் எம்.பி., மஹுவா வழக்கு
பீஹாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி, திரிணமுல் காங்., - எம்.பி., மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 'தேர்தல் கமிஷனின் உத்தரவு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது.இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், தகுதியான பல லட்சம் வாக்காளர்கள் ஓட்டுரிமையை இழக்க நேரிடும். பிற மாநிலங்களில் இதே போன்ற உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பிக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும்' என, அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு எதிராக தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது.