வரதட்சணை பொய் வழக்குகள் துஷ்பிரயோகம்!
புதுடில்லி : கணவரையும், அவருடைய குடும்பத்தாரையும் பழிவாங்க, வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களை பல பெண்கள் துஷ்பிரயோகம் செய்வதாக சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய பொய் புகார்களை முளையிலேயே கிள்ளி எறிய நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. மனைவியின் பொய் புகார்களால் மன உளைச்சலுக்கு ஆளான பெங்களூரு இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பாக விவாதிக்கப்படும் நேரத்தில், சுப்ரீம் கோர்ட் விடுத்துள்ள எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 'விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், என் மீதும், என் குடும்பத்தார் மீதும் என் மனைவி குடும்ப வன்முறை புகார்களை தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vopj3ai5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'பழிவாங்கும் நோக்கோடு பொய் புகார்களை கொடுத்துள்ளார். இது எங்களுக்கு அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது' என கூறியிருந்தார்.மனைவியின் புகார்களை ரத்து செய்ய ஹைதராபாத் ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனதால், சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் நாகரத்தினா, கோட்டீஸ்வர் சிங் விசாரித்தனர். அவருடைய மனுவை ஏற்று, மனைவியின் புகார்களை தள்ளுபடி செய்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது:பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்துடன், இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏ பிரிவு கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை பயன்படுத்தி கணவர் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் பெண்கள் புகார் கொடுப்பது அதிகரித்துள்ளது.கொடுமைக்கு ஆளாகும்போது பெண்கள் புகார் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்றே கூறுகிறோம். திருமண உறவில் பிரச்னை ஏற்படும்போது, கணவர் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் பொய்யான புகார்களை கூறுவது தடுக்கப்பட வேண்டும்.குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் என்பது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயம். அதையே ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. ஆனால், அந்த போக்கு நாடு முழுவதும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கணவர் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் உள்ள கோப தாபங்களுக்கு வடிகாலாக பல பெண்கள் இந்த சட்டப் பிரிவை பயன்படுத்துகின்றனர். இதனால், சட்டத்தின் நோக்கமே் நீர்த்து போகிறது.ஆதாரம் இல்லாத, சாட்சியங்கள் இல்லாத பொத்தாம் பொதுவான அல்லது சாதாரணமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், நீதிபதிகள் ஆரம்ப நிலையிலேயே அவற்றை கண்டறிந்து நீக்க வேண்டும். முளையிலேயே கிள்ளி எறிவது நேர்மையான, விரைவான நீதி பரிபாலனத்துக்கு உதவும். சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி எவரையும் தண்டிக்க முற்படுவது குற்றமாகும். இந்த நிலையை ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இந்த சட்டத்தின் பிரிவுகளை மறுஆய்வு செய்யலாம். இதனால்தான், கணவர் மீதான புகார்களின் நம்பகத்தன்மையை ஆராயாமல் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என, பல வழக்குகளில் இந்த நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
புயலை கிளப்பிய தற்கொலை
பெங்களூரில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ், 34, சமீபத்தில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து, 90 நிமிட வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும், 24 பக்க கடிதமும் எழுதியுள்ளார். அவற்றில் சுபாஷ் கூறியுள்ளதாவது:நான் 2019ல் நிகிதா சிங்கானியாவை திருமணம் செய்தேன். அடுத்த ஆண்டு, ஆண் குழந்தை பிறந்தது. அப்போது இருந்தே, மனைவியின் பெற்றோர் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தனர். நான் மறுத்ததால், மனைவி 2021ல் பிரிந்து சென்றார்.அதன் பிறகும், பணம் கேட்டு தொந்தரவு செய்தார். நான் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாக பொய் புகார் கொடுத்தார். இயற்கைக்கு மாறான தாம்பத்தியம், கொலை முயற்சி என்று பல புகார்களை என் மீதும், என் குடும்பத்தார் மீதும் சுமத்தி வழக்குகள் போட்டார். வரதட்சணை கேட்டு நான் துன்புறுத்தியதால்தான், தன் தந்தை மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் புகார் கொடுத்தார். உண்மையில் அவர் நீண்ட காலமாக பல நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களே உயிரோடு இருப்பார் என்று டாக்டர்கள் கூறியதால்தான், எங்களுடைய திருமணம் அவசரமாக நடத்தப்பட்டது.என் மீது போட்ட பொய் வழக்குகளுக்காக, உத்தர பிரதேச நீதிமன்றங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியதாயிற்று. விவாகரத்து பெற்ற பிறகும், பெரும் தொகை ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இத்தனைக்கும் அவர் நல்ல வேலையில் உள்ளார். ஜீவனாம்சம் தவிரவும், பெரிய தொகை கேட்டு அவருடைய குடும்பத்தார் மிரட்டினர்.சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு சாதகமாக இருப்பதால், என்னால் ஓரளவுக்கு மேல் எதிர்த்து நிற்க முடியவில்லை. குடும்ப கோர்ட் நீதிபதியும் பெண்ணுக்கு சாதகமாக நிற்பதால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போயிற்று. இதற்கு மேல் இந்த பிரச்னைகளை சந்திக்க தயாராக இல்லை. அதனால் தற்கொலை செய்கிறேன்.இவ்வாறு சுபாஷ் கூறியுள்ளார். நான்கு வயது மகனுக்காக அவர் வைத்திருந்த கனவுகளையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவும், கடிதமும் சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திஉள்ளது.