மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ
மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பற்றியது. சிக்கியவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.மும்பையின் வித்யவிஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதன் 5வது மாடியில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.தீப்பிடித்தது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். தீ ஜூவாலைகள் அதிக உயரத்துக்கு எழும்பியதால் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.இருப்பினும் சிறிதுநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோன்று, பால்கர் மாவட்டம் கோன் கிராமத்தில் உள்ள மெத்தை தயாரிக்கும் ஆலையில் தீ பிடித்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் ஆலை ஊழியர்கள் 2பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.