| ADDED : ஜன 06, 2024 06:55 AM
மங்களூரு: திருமண மண்டபத்துக்கு வந்து, மணமகன் மீது குற்றம்சாட்டி திருமணத்தை காதலி ஒருவர் நிறுத்த முயற்சித்த சம்பவம், மங்களூரில் நடந்தது.கேரளா மாநிலம், கோழிக்கோடைச் சேர்ந்தவர் அக்ஷய், 26. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இவருக்கு, திருமண இணையதளம் மூலம், மைசூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நேரில் சந்தித்தனர். நாளடைவில் பரஸ்பரம் காதலிக்க துவங்கினர். உடல் ரீதியாகவும் நெருக்கமாகினர்.அதன்பின், அக்ஷயின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தார். இதனால், டிசம்பர் 26ல், அக்ஷய் மீது கேரள போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்திருந்தார். வழக்கு விசாரணையில் உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் தயாராகினர்.இந்நிலையில் அக்ஷய்க்கும், மங்களூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. உல்லாலின், கர்நாடக - கேரள எல்லையில், பீரி என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. தகவலறிந்து போலீசாருடன் அங்கு வந்த முதல் காதலி, நடந்ததை கூறி திருமணத்தை தடுக்க முயற்சித்தார்.காதலியின் எதிர்ப்புக்கு இடையிலும், மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய அக்ஷய், “எனக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளது. மருத்துவமனையில் சேரப்போகிறேன்,” என, பெற்றோர், உறவினர்களிடம் கூறிவிட்டு தப்பிவிட்டார். அவரை உல்லால் போலீசார், தேடி வருகின்றனர்.