சுற்றுலா தலங்கள் நிறைந்த ஹாவேரி
ஹாவேரி, கர்நாடகாவின் வரலாற்று பிரசித்தி பெற்ற மாவட்டம். இதனை வட மாவட்டங்களின் 'கேட் வே' என, அழைக்கின்றனர். கதக் மாவட்டத்துடன் ஹவேரியும் கூட, இதற்கு முன் தார்வாட் மாவட்டத்தின் அங்கமாக இருந்தது. அதன்பின் அதை பிரித்து, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. ஹாவேரி பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த இடமாகும்.* சித்தேஸ்வர் கோவில்ஹாவேரிக்கு வரும் சுற்றுலா பயணியர், ஆன்மிக தலமான சித்தேஸ்வர் கோவிலில் இருந்து, தங்களின் சுற்றுலாவை துவக்கலாம். இது வரலாற்று பிரசித்தி பெற்றது. ஹாவேரி புறநகரில் உள்ளது. ஹொய்சாளர் பாணியில் கட்டப்பட்டதாகும். சிவலிங்கத்துடன், விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.* தாரகேஸ்வரா கோவில்சித்தேஸ்வரர் கோவிலை தரிசித்த பின், தாரகேஸ்வரா கோவிலுக்கு வரலாம். அதுவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்தான். மனம் கவரும் விதமான சிற்பக்கலைக்கு பிரசித்தி பெற்றதாகும். கோவிலின் வெளி வளாகத்தில், பல்வேறு கடவுள் சிலைகளை தரிசிக்கலாம்.ஹாவேரியில் ஆன்மிக தலங்கள் மட்டுமின்றி, இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா தலங்களும் நிறைந்துள்ளன. இவற்றில் பங்காபுரா மயில்கள் சரணாலயமும் ஒன்றாகும். இங்கு ஆயிரக்கணக்கான வண்ண மயில்களை காணலாம். 136 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பங்காபுரா கோட்டையின் இடிபாடுகளை காணலாம்.* மான் சரணாலயம்ராணி பென்னுாரின் மான்கள் சரணாலயம், ஹாவேரியில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு பலவிதமான மான்களை பார்க்கலாம். 6,000 மான்கள் உள்ளன. மான்கள் மட்டுமின்றி பல பிராணிகளும் இங்குள்ளன.
பெங்களூரு - புனே நெடுஞ்சாலையில் பங்காபுரா என்ற இடத்திலிருந்து 2.5 கி.மீ., துாரத்தில் மயில்கள் சரணாலயம் உள்ளது. ஹூப்பள்ளியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது. கர்நாடகாவின், அனைத்து நகரங்களில் இருந்தும், பஸ், ரயில் வசதி உள்ளது. தனியார் வாகனங்களும் இயங்குகின்றன.
மான்கள் சரணாலயம் ஹாவேரி, ராணி பென்னுாரின் ஹனுமனமட்டியில் உள்ளது. மாலை 4:00 மணிக்கு பின், சுற்றுலா பயணியருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ராணி பென்னுாருக்கு வந்து, அங்கிருந்து மான்கள் சரணாலயத்துக்கு செல்லலாம். வாகன வசதிகள் ஏராளம். பெங்களூரில் இருந்து ராணி பென்னுார் 299 கி.மீ., துாரத்தில் உள்ளது.இரண்டு நகரங்களுக்கிடையே பஸ், ரயில் வசதி உள்ளது. ஹாவேரியின் சித்தேஸ்வரா கோவிலுக்கு உத்தரகன்னடா சிர்சி வழியாக வரலாம். சிர்சியில் இருந்து 72 கி.மீ., துாரத்தில் சித்தேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. பஸ், ரயில், வாடகை வாகனங்கள் வசதி உள்ளது. காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி உள்ளது. - நமது நிருபர் -