உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்

அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்

பனாமா :அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாடு அண்டை நாடான பனாமாவுக்கு நேற்று அனுப்பி வைத்தது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியில் டிரம்ப் அரசு தீவிரமாக உள்ளது. இந்தாண்டில் மட்டும் இதுவரை மூன்று கட்டங்களாக 332 இந்தியர்கள் நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நேரடியாக அவரவர் நாட்டுக்கு அனுப்புவதில் சிக்கல்களை சந்திப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதன் காரணமாக அண்டை நாடுகளான பனாமா, கவுதமாலா, கோஸ்டா ரிக்கா ஆகியவற்றை, 'டிரான்சிட்' எனப்படும் பயணியர் பரிமாற்ற நாடுகளாக பயன்படுத்துகிறது. இதற்கு அந்நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த நடைமுறைக்கு ஆகும் செலவை முழுமையாக அமெரிக்கா செலுத்திவிடும். இந்நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 299 பேர் நேற்று பனாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த குழுவில் இந்தியர்களும் உள்ளனர். பனாமாவில் தரையிறங்கிய 299 பேரில் 171 பேர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர். சொந்த நாட்டிற்கு திரும்ப மறுத்த 98 பேர் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அடுத்த கட்டமாக சட்டவிரோதமாக தங்கியுள்ள மற்றொரு குழுவினருடன் ஒரு விமானம் அமெரிக்காவில் இருந்து கோஸ்டாரிகாவுக்கு நாளை செல்கிறது. அதிலும் இந்தியர்கள் அடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

பாதுகாப்பாக உள்ளனர்!

அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு வந்து இறங்கிய ஆவணங்கள் இல்லாத நபர்கள், தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக, 'நாங்கள் பாதுகாப்பாக இல்லை' என்ற வாசகம் அடங்கிய அட்டைகளை காட்டினர். இதனால் இந்தியர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுந்தது.இது குறித்து பனாமா, நிகரகுவா மற்றும் கோஸ்டாரிகாவுக்கான இந்திய துாதரகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியர்கள் அனைவரும் ஹோட்டல் அறைகளில் பாதுகாப்பாக தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்தியர்களின் நலனை உறுதி செய்ய பனாமா நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை