புதுடில்லி: 'கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரின் போது, அடுத்தடுத்து, 'சிக்ஸர்'கள் அடிப்பது போல, ஓய்வு பெறும் முன் நீதிபதிகள் சிலர் நிறைய உத்தரவுகளை பிறப்பிப்பது வளர்ந்து வருகிறது. இது மிகவும் ஆட்சேபத்துக்குரியது' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதி ஒருவர், கடந்த நவம்பர் மாத இறுதியுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது. அதற்கு முன்பாக நவ., 19ம் தேதி அவர் பணியில் இருந்து திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். ஏனெனில் சம்பந்தம் இல்லாமல் அடுத்தடுத்து இரண்டு உத்தரவுகளை பிறப்பித்ததால், மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ti8uix9p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை எதிர்த்து மாவட்ட நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம்.பன்சோலி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஓய்வு பெறுவதற்கு முன்பாக மனுதாரர் சிக்ஸர் அடிக்க துவங்கி இருக்கிறார். இது துரதிருஷ்டவசமானது. இதற்கு மேலும் இது பற்றி விவரிக்க விரும்பவில்லை. ஓய்வு பெறும் முன் அடுத்தடுத்து நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கும் பழக்கம் நீதிபதிகளிடம் வளர்ந்து வருகிறது. இதை, ஒருபோதும் ஏற்க முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர். மாவட்ட நீதிபதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விபின் சாங்கி, “பதவி காலத்தில் சிறப்பாக சேவை செய்திருக்கிறார். ஆண்டு ரகசிய அறிக்கையில், அவருக்கு நன்மதிப்புகள் கிடைத்துள்ளன. நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்த காரணத்திற்காக அவரை எப்படி பணியிடை நீக்கம் செய்யலாம். நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது,” என வாதிட்டார். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மத்திய பிரதேச நீதிபதிகளின் ஓய்வு வயதை, 60ல் இருந்து 61 ஆக உயர்த்தகோரி, நவ., 20ம் தேதி அம்மாநில அரசிடம், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனால், நவ., 30ம் தேதி ஓய்வு பெற வேண்டிய அந்த நீதிபதியின் பதவிக்காலம், 2026 நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை கூட அறியாமல், அவர் ஓய்வு பெறும் முன் அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார். தவிர, இடைநீக்கத்திற்கான காரணத்தை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். ஒரு மூத்த நீதிபதியிடம் இப்படியொரு அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக உயர் நீதிமன்றத்தில் நேரடியாக அவர் மனு தாக்கல் செய்திருக்கலாம். தவிர, உயர் நீதிமன்றத்தை அணுகாமல், நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகியதும் ஏற்புடையதல்ல. நீதிபதியை இடைநீக்கம் செய்யும் முடிவை, உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு எடுத்திருந்தால் கூட, பல வழக்குகளில் அந்த முடிவு புறந்தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மத்திய பிரதேச மாவட்ட நீதிபதியின் மனுவை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும், அம்மாநில உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.