உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெ., நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு பெங்களூரு சி.பி.ஐ., கோர்ட் அதிரடி உத்தரவு

ஜெ., நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு பெங்களூரு சி.பி.ஐ., கோர்ட் அதிரடி உத்தரவு

பெங்களூரு:'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை, தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. இவர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில், 1996ம் ஆண்டு டிசம்பர் 7 முதல் 12ம் தேதி வரை, ஜெ.,யின் சென்னை போயஸ் கார்டன் வீட்டில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது.இதில் தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு டிரங்க் பெட்டிகள், 1,526 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள் மற்றும் 27 விலை உயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. வழக்கு பெங்களூருவில் நடந்ததால், கைப்பற்றப்பட்ட பொருட்கள் இங்கு எடுத்து வரப்பட்டன. 'இந்த பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடக அரசின் கருவூலத்தில் சேர்க்க வேண்டும்' என்று, தகவல் சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. * தீபக், தீபா மனுஅதே நேரம், ஜெயலலிதாவின் பொருட்களுக்கு அவருடைய வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகிய இருவரும் உரிமை கொண்டாடினர். பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி, அவர்கள் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம், சமீபத்தில் தள்ளுபடி செய்தது.இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட பொருட்களில் 27 மட்டும், தமிழகத்தில் இருப்பதும், தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு பெட்டிகள், 1,526 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள் மட்டும், கர்நாடக அரசு கருவூலத்தில் இருப்பதும் தெரியவந்தது. தமிழகத்தில் இருக்கும் பொருட்கள், ஜெயலலிதாவின் முன்னாள் செயலர் பாஸ்கரனிடம் இருப்பதாவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக டி.ஜி.பி.,க்கு, நரசிம்மமூர்த்தி சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். * புறம்போக்கு நிலம் இந்நிலையில், பொருட்களை ஏலம் விடுவது தொடர்பாக, நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மோகன் நேற்று அளித்த தீர்ப்பு:ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய ஆறு பெட்டிகள், 1,000 ஏக்கர் நிலப்பத்திரங்களை தமிழக அரசிடம், பிப்ரவரி 14, 15ம் தேதிகளில் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும்.பொருட்களை எடுத்து செல்ல, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெட்டிகளுடன் வர வேண்டும். பொருட்களை கொண்டு செல்ல உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். பொருட்களை எடுத்து செல்லும்போது, மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். இந்த நடைமுறையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.ஜெயலலிதாவிடம் இருந்து 1,526 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினாலும், அதில் 526 ஏக்கர் புறம்போக்கு நிலம் என்றும், ஒரு நிலத்தை இரண்டு, மூன்று முறை பத்திரப்பதிவு செய்ததும் தெரியவந்து உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் 1,000 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை