நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 6 வயது சிறுமி உள்பட 4 பேர் பலி
நவி மும்பை: நவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்ததில் 6 வயது சிறுமி உள்பட 4 பேர் பலியாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; நவி மும்பையில் பிரதான பகுதியில் பல அடுக்குகள் கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடியின் 10வது தளம் திடீரென தீப்பிடித்தது. பின்னர் இந்த தீயானது, 11 மற்றும் 12ம் தளத்துக்கு வெகு வேகமாக பரவியது.இதைக் கண்ட அங்குள்ளோர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறிதுநேரம் போராடிய அவர்கள், தீயைக் கட்டுபடுத்தினர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 4 பேர் தீயில் கருகி சடலங்களாக கிடப்பதை கண்டனர். அவர்களின் உடல்களை கைப்பற்றிய அவர்கள், படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தீயில் உடல்கருகி பலியானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அவர்கள் பெயர் வருமாறு; வேதிகா சுந்தர் பாலகிருஷ்ணன்(6), கமலா ஹிரால் ஜெயின் (84), சுந்தர் பாலகிருஷ்ணன்(44) மற்றும் பூஜா ராஜன் (39).10வது தளத்தில் எப்படி தீப்பிடித்தது என்பதற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், மின்கசிவு கோளாறால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று மற்ற குடியிருப்புகளில் வசிப்போர் தெரிவித்துள்ளனர்.