பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் கைது
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவிய நபர் கைது செய்யப்பட்டார். ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, 26, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பகுதி நேர ஆசிரியராக பணியாற்றும் இவருக்கு லஷ்கர் அமைப்புடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கட்டாரியாவை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.