மும்பை: மஹா.,வின் வோர்லி சட்டசபை தொகுதியில் களமிறங்கி உள்ள முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யாவை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா களமிறக்கப்பட்டு உள்ளார். லோக்சபா தேர்தலின் போதும், இத்தொகுதியின் பொறுப்பாளர் ஆக மிலிந்த் தியோரா செயல்பட்டவர் ஆவார். மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ., முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத கங்கிரஸ் ஒரு அணியாகவும், உத்தவ் தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஒரு அணியாக களமிறங்கி உள்ளன. இந்த தேர்தலில், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா வோர்லி தொகுதியில் களமிறங்குவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த தேர்தலிலும் அவர் இத்தொகுதியில் தான் வெற்றி பெற்று இருந்தார். இங்கு, உத்தவின் உறவினரான ராஜ் தாக்கரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி சார்பில், சந்தீப் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டு இருந்தார். அவர், ஏக்நாத் ஷிண்டே தரப்பின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.ஆனால், அந்த தொகுதியில் தனது கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்தார். நீண்ட பரிசீலனைக்கு பிறகு, ராஜ்யசபா எம்.பி., ஆக இருக்கும் மிலிந்த் தியோராவை வேட்பாளராக அவர் அறிவித்தார். இவர், காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஜனவரி மாதம் தான் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர்ந்தார். கடந்த லோக்சபா தேர்தலின் போது வோர்லி தொகுதி பொறுப்பாளர் ஆக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவர் அந்த தொகுதியில் எம்.பி., பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். தற்போது, எம்.எல்.ஏ., பதவிக்கு களமிறங்கி உள்ளார். நடுத்தர வர்க்கத்தினர், மீனவர் மற்றும் வசதி படைத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என்பதால் மிலிந்த் தியோரா எளிதாக வெற்றி பெறுவார் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
யார் இவர்
மிலிந்த் தியோராவின் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தது. இவரது தந்தை 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தவர். மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல பதவிகளை வகித்தவர். 2011 முதல் 2015 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். லோக்சபா தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் மீது இருந்த அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே கட்சியில் சேர்ந்தார்.