உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதசாரிகள், சைக்கிள்கள் இயக்கத்துக்கு புதிய சாலை விதிகள்: கோர்ட் உத்தரவு

பாதசாரிகள், சைக்கிள்கள் இயக்கத்துக்கு புதிய சாலை விதிகள்: கோர்ட் உத்தரவு

'அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும், பொது இடங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆறு மாதங்களுக்குள் சாலை விதிகளை உருவாக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் கோவையைச் சேர்ந்தவர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜசேகரன். நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது தொடர்பாக இவர் உச்ச நீதிமன்றத்தில், 2012ல் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'நாட்டில், சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தடுக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, கோரியிருந்தார். கடந்த, 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 138 - 1ஏ மற்றும் 210டி பிரிவுகளின் கீழ், மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களான சைக்கிள், கை வண்டிகளின் இயக்கத்தையும், பாதசாரிகள் சாலையை கடப்பதையும் ஒழுங்குபடுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் விதிகளை உருவாக்க வேண்டும். இதுவரை அதற்கான விதிகள் இல்லை எனில், ஆறு மாதங்களில் அவற்றை உருவாக்க வேண்டும். அதே போல் தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்த்த பிற சாலைகளின் வடிவமைப்பு, கட்டடம், பராமரிப்பு தரநிலைகள் குறித்த விதிகளும் ஆறு மாதங்களுக்குள் உருவாக்கி அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஜெகதீசன்
அக் 08, 2025 18:21

கடைகளுக்கு வெளியே இருக்கும் நடை பாதையையும் அவை ஆக்கிரமிக்கிறது. பல சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இனி உருவாக்கும் புது நகரங்களில் அனைத்து அம்சங்களோடு அமைக்கலாம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 08, 2025 10:01

13 வருடங்கள் கிடப்பில் கிடந்த வழக்கு. நமது கோர்ட்களின் நீதி வழங்கும் வேகத்திற்கு எடுத்து காட்டு. என்ன செய்வது செக் ரிட்டர்ன் வழக்குகளையே ஐந்து வருடங்கள் விசாரித்தும் தீர்ப்பு வழங்காமல் லோக் அதாலத்துக்கு தள்ளிவிடும் நீதிபதிகள் இதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்.


Iyer
அக் 08, 2025 07:20

சைக்கிள் மற்றும் நடந்து செல்வோருக்கு - தனியாக ROAD LANES அமைக்கவேண்டும். ஒவ்வொரு நகரிலும் - நடுப்பகுதி - மற்றும் அதிக RUSH உள்ள பகுதிகளில் வாகனங்களை தடை செய்து சைக்கிள் மற்றும் நடப்பதை மட்டும் அனுமதிக்க வேண்டும்.


K Jayaraman
அக் 08, 2025 05:34

பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக, சாலையின் இரு பக்கங்களிலும் நடைமேடைகள் அமைப்பது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை