| ADDED : மார் 15, 2024 12:57 AM
புதுடில்லி: ஓ.டி.டி., எனப்படும் இணையம் வாயிலாக படங்கள், தொடர்களை ஒளிபரப்பும் தளத்துக்கு நம் நாட்டில் தணிக்கை கிடையாது. இதை சாதகமாக பயன்படுத்தி முழுக்க முழுக்க ஆபாச படங்களை மட்டும் ஒளிபரப்பும் ஓ.டி.டி., தளங்கள் அதிகரித்தன.இது குறித்து மத்திய அரசுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்பினர் தொடர்ந்து புகார் அளித்தனர். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்த, 18 ஓ.டி.டி., தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய, 57 சமூக வலைதள கணக்குகளை நேற்று முடக்கியது.இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:கலை படைப்பு என்ற பெயரில் ஆபாசத்தையும், அநாகரிகத்தையும் ஓ.டி.டி., தளங்கள் பரப்பக் கூடாது. தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பொறுப்பின்றி செயல்பட்ட பல்வேறு ஓ.டி.டி., தளங்களுக்கு எதிராக, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக செயல்படுபவர்களுடன் ஆலோசித்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.