ஜம்மு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; வரிசை கட்டி நிற்கும் 1000 பழ லாரிகள்
ஸ்ரீநகர்: ஜம்மு நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடியால் 1000 பழ லாரிகள் நகர முடியாமல் சிக்கித் தவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் கடந்த பல நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழை எதிரொலியாக செனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.அதன் காரணமாக நாட்டின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் நெடுஞ்சாலை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது.போக்குவரத்து சீராகாததால் ஆப்பிள், பேரிக்காய் ஏற்றிய 1000க்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கித் தவிக்கின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு லாரியிலும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான சரக்குகள் தேக்கம் அடைந்து இருக்கின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முகல் சாலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டு இருந்தாலும், பாதுகாப்பு கருதி கனரக வாகனங்கள் அவ்வழியாக இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை.