ராம் நகர்: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவர், திருநங்கையாக திரும்பியதால், மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மனைவி, குழந்தைகள் வேண்டாம் என்று அவர் கூறியதால், மனைவி குடும்பத்தினர் சோகத்துடன் வீடு திரும்பினர்.ராம் நகரை சேர்ந்தவர் லட்சுமண்ராவ். இவருக்கு 2015 ல் திருமணம் நடந்தது. இவருக்கு இரட்டையர்கள் மகன்களாக பிறந்தனர்.கடந்த 2017ல் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ராம்நகரின் ஐசூர் போலீஸ் நிலையத்தில் மனைவி புகார் அளித்தார்.2வது திருமணம்லட்சுமண் ராவின் சித்தி மகன்கள், பல ஊர்களில் அவரை தேடி அலைந்தனர்.இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. லட்சுமண் ராவ் வரமட்டார் என அவரது மாமனார் நினைத்து, தனது மகளுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முயற்சித்தார்.ஆனால், அவரது மகள், தனது கணவர் லட்சுமண் ராவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். இப்படியே ஆறு ஆண்டுகள் காத்திருந்தார்.'பிக் பாஸ்' நிகழ்ச்சிபிக் பாஸ் போட்டியாளர் நீதுவுக்கு மைசூரில் சமீபத்தில் பாராட்டு விழா நடந்து. அவரை திருநங்கையர் வரவேற்றனர். அதில் ஒருவராக லட்சுமண் ராவ் போன்ற உருவ தோற்றம் உள்ளவரும் பங்கேற்றிருந்தார்.இதை சமூக ஆர்வலரும், திருநங்கையுமான ராஷ்மிகா என்பவர் தனது 'ரீல்ஸ்'ல் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த போலீசார், லட்சுமண் ராவ் சாயலில் உள்ள பெண் குறித்து, ராஷ்மிகாவிடம் கேட்டனர்.அதற்கு ராஷ்மிகா,சம்பந்தப்பட்ட பெண்ணின் பின்னணி எனக்கு தெரியாது. ஆனால், அவரின் முகவரியை தருவதாக தெரிவித்தார். ராஷ்மிகா கொடுத்த முகவரியை வைத்து அங்கு போலீசார் சென்று பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தனர்.ஏனெனில், போலீசிடம் இருந்த லட்சுமண் ராவ் படத்துடன், திருநங்கையின் படம் ஒத்துபோகவில்லை. ஆனால் முகம் மட்டும் லட்சுமண் ராவ் சாயலில் இருந்தது. அதற்கு அந்த திருநங்கை, 'நான் லட்சுமண் ராவ் அல்ல, விஜயலட்சுமி' என்று கூறினார்.போலீசார் பலமுறை பேசியும், தான் விஜயலட்சுமி தான் என்று கூறி வந்தார். ஒருகட்டத்தில் போலீசாரும், அவர் உண்மையிலேயே விஜயலட்சுமி தான் என்று முடிவு செய்து, அங்கிருந்து புறப்பட்டனர்.அப்போது அந்த திருநங்கை, 'நான் விஜயலட்சுமி என்கிற லட்சுமண் ராவ்' என்று கத்தினார். இதையடுத்து அவரை ராம் நகர் ஐசூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு லட்சுமண் ராவ் மனைவி, மகன்கள், குடும்பத்தினரை வரவழைத்தனர்.சோகம்கணவர் கிடைத்து விட்டார் என்ற சந்தோஷத்தில் அங்கு வந்த மனைவி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். லட்சுமண் ராவ் பெண்ணாக மாறி நின்றிருந்ததை பார்த்து, திகைத்து நின்றனர். அவரின் மகன்களும், அவரிடம் செல்ல மறுத்தனர்.அப்போது போலீசார், குடும்பத்துடன் சேர்ந்து வாழும்படி கூறினர். ஆனால், விஜய லட்சுமியோ, 'எனக்கு மனைவியும் வேண்டாம், குழந்தைகளும் வேண்டாம்.'நான் ஆரம்பத்தில் இருந்தே பெண் தான். இதில் உங்கள் தவறு இல்லை. என்னை விட்டு விடுங்கள்' என்றார்.இதையடுத்து, லட்சுண்ராவின் உறவினர்கள் சோகத்துடன் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.