| ADDED : செப் 10, 2024 11:12 AM
புனே: 'இந்தியா முன்னேறுவதை பிடிக்காதவர்கள், அதன் வளர்ச்சி பாதையில் தடைகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அது வெற்றி பெறாது' என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.புனேயில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: ஹிந்து என்ற சொல், பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்வதை குறிக்கும். இந்தியா ஒரு நோக்கத்திற்காக உருவானது. உலகமே ஒரு குடும்பம் என்ற நோக்கத்தை முன்வைக்கிறது. முந்தைய காலத்தில் அந்நிய படையெடுப்பு வெளிப்படையாக தெரிந்ததால் மக்கள் உஷாராக இருந்தனர். ஆனால், தற்போது வேறு வகைகளில் பிரசாரம் செய்கின்றனர். இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பொருளாதாரம், ஆன்மிகம் மற்றும் அரசியல் ரீதியில் நம்மை சீரழிக்க முயற்சி நடக்கிறது. இந்தியாவின் முன்னேற்ற பாதையில் சில சக்திகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. சர்வதேச அரங்கில் நமது எழுச்சியை கண்டு பயப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.இந்தியா வளர்ந்தால், தனது வணிகம் பாதிக்கப்படும் என பயப்படும் சிலர், தடைகளை ஏற்படுத்துகின்றனர். இதற்காக தங்கள் முன் உள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகின்றனர். இதைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. சத்ரபதி சிவாஜி காலத்திலும் இது போன்று நடந்தது. ஆனால், தர்மத்தின் சக்தியை பயன்படுத்தி சமாளிக்கப்பட்டது. தர்மம் என்பது மதச்சடங்கு மட்டுமல்ல. அது உண்மை, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த கருத்து ஆகும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.