புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பாக வரும் 17-ல் மோடி தலைமையிலான குழு ஆலோசனை நடத்துகிறது. ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமார் நாட்டின் 25-வது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக கடந்த 2022ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். வரும் பிப்ரவரி 18ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர், மற்றும் பிற தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக தேர்தல் நியமன கமிஷனர்கள் நியமன சட்ட திருத்த மசோதா 2003ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.இதன் படி பிரதமர் , எதிர்க்கட்சிதலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு, தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சரை சேர்க்க வலியுறுத்தியது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் வரும் 18-ம் தேதியுடன் பணி நிறைவு பெறுவதால், இந்தாண்டு, அடுத்தாண்டு நடக்க உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை நடத்திட வேண்டி அடுத்த தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பது குறித்து வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடக்கிறது.இக்கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் ராம் அர்ஜூன் மெக்வால், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்திற்கு பின் புதிய தலைமை தேர்தல் கமிஷனர் பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளது.ஞானேஸ்குமார் அடுத்த கமிஷனரா?
இந்திய தேர்தல் ஆணையம், ஒரு தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில், இரு தேர்தல் கமிஷனர்கள் கொண்ட அமைப்பின் கீழ் செயல்படுகிறது. தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனரான ராஜிவ்குமாருக்கு அடுத்த படியாக உள்ள தேர்தல் கமிஷனரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞானேஸ்குமார், அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக பெயர் பரிந்துரைக்கப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் 17-ல் மோடி தலைமையிலான குழு கூட்டத்தில் இவரது நியமனம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் எனவும், மேலும் காலியாக உள்ள மற்றொரு தேர்தல் கமிஷனர் நியமனம் குறித்த அறிவிப்பும் அப்போதே வெளியாகும் என தெரிகிறது. யார் இந்த ஞானேஸ்குமார்
1988 ம் ஆண்டு கேரள ஐ.ஏ.எஸ். கேடரான ஞானேஸ்குமார், மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு (2024) லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க தயாராக இருந்த நேரத்தில் தேர்தல் கமிஷனர்களில் ஒருவர் இருந்த அருண் கோயல் என்பவர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தான் ஞானேஸ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் 17-ல் நடக்க உள்ள தேடுதல் குழு கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஸ்குமார் தேர்வு செய்யப்பட்டால், வரும் 2029 ஜனவரி 26-ம் தேதி வரை இவர் பதவியில் இருப்பார்.இவரது தலைமையில் இந்தாண்டு பீஹார் உள்ளிட்ட சில மாநிலத்திற்கும், 2026ம் ஆண்டு தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது.